Saturday, March 19, 2011

சம்பவங்கள் - பேச்சாளர்

பேச்சாளர்
  கல்லூரியில் கம்ப்யூட்டர் லேப்பில் பணிபுரிந்த ஒருவர், நான் அங்கு வேலை பார்த்த காலத்தில் ஒரு நாள் மதியம் என்னிடம் வந்து பேசினார். அவர் ஆங்கில வார்த்தைகளை தமிழ் போல உச்சரிப்பார். லேப்பில் மானிடரெல்லாம் (மானிட்டர் இல்லை) தூசியாயிருக்கிறது என்பார். நான் 'விட்டா மானிட சமுதாயத்திற்கே தூசி தட்டுவீங்க போலிருக்கே' என்பேன்.அவர் ஏன் அன்று வந்து பேசினார் என்று பின் நொந்து கொள்ளும்படி ஆனது. அவரின் சொந்தக்காரர் ஒருவர் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதாகச் சொன்னார். என் கெட்ட நேரம், உங்க சொந்தக்காரருக்குக் கல்யாணம் ஆயிருச்சா?' என்று கேட்டேன். அவர் சொன்னது,'இல்ல சார், அவர் பேச்சாளர் சார்!'. நான் கேட்டேன்,' அவரு கட்சியில பேச்சாளர் சரி. அவருக்குக் கல்யாணம் ஆயிருச்சா'. அவரின் பதில்,'அவரு பேச்சாளர் சார்'. நான் கடுப்பின் உச்சியில் மீண்டும் கேட்டேன்,'அவரு பேச்சாளர் தான் ஒத்துக்கிறேன். நான் கேட்கிறது கல்யாணத்தைப் பத்தி'. அவர் நிதானமாகச் சொன்னார்,'அதத் தான் சொல்றேன் சார்.அவரு பேச்சாளர்'. நான் இதற்குள் கொஞ்ச தூரம் வெயில் நேரத்தில் லொங்கு லொங்கு என்று ஓடிய மாதிரி ஆகியிருந்தேன். 'நீங்க அவர் பேச்சிலர்னு சொல்றீங்களா?'. அவர் ஆம் என்பது போல் தலை ஆட்டினார். நான் கை எடுத்துக் கும்பிட்டு 'ஐயா, நீங்க ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பாலம் போட்டது போதும்' என்றேன். அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் வேர்த்துக் கொட்டுகிறது. என் நண்பர்கள் பலர் என் கடியைப் பெரிதாகச் சொல்வார்கள். நான் எப்படியெல்லாம் மாட்டியிருக்கிறேன் என்று அவர்கள் அறிந்தால் சந்தோசப்படுவார்கள்.


No comments:

Post a Comment