Wednesday, June 8, 2011

புனே பயணம் - 1

அலுவல் வேலையாகப் புனேக்குப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாட்கள் அங்கு தங்கல்.அதிகாலை 4.50 மணிக்கு விமானம். வீட்டை விட்டுக் கிளம்பிய நேரம் 2.30 மணி. கால் டாக்சி போன வேகத்தில் புனேயே வந்து விடும் போலிருந்தது.ஓட்டும் போது கால் டாக்சி ட்ரைவர் தூங்கிவிட்டால் அவருக்கு நல்லதில்லையே என்ற நல்லெண்ணத்தில், என் கண் எரிச்சலை அடக்கிக் கொண்டு ,அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு சென்றேன்.
    செக் இன் பேக்கைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தை ஓட்ட வேண்டும். கேபின் லக்கேஜை இழுத்துக் கொண்டு அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு சக்கரத்தில் விரிசல் இருந்ததால் கிடுக் கிடுக் என்று பின்னணி இசை கொடுத்தபடி இருந்தது. இது போன்ற நம் இசை நமக்குப் பிடிக்கலாம், கேட்கும் மற்றவர்களுக்கு?அந்த நேரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.விளக்கில்லாமல் அந்தக் கடைகள் மேக்கப் கலைந்த நடிகையைப் போலிருந்தன. 
   வரிசையாய் இருந்த பல இருக்கைகளில் நானும் வந்து உட்கார்ந்தேன். என் எதிரே ஒரு தடித்த பேரிளம்பெண் முறைத்தபடி உட்கார்ந்திருந்து, நம்பியாரை (வில்லன் நடிகர், பூஜா நம்பியாரில்லை!) ஞாபகப்படுத்தினார். எடை குறைப்பு முயற்சியில் இருந்தாலும், மனம் காபி குடிக்கச் சொன்னது. இயந்திரத்திலிருந்து வரும் காபி எப்பவும் சுமார் தான் என்றாலும் ஆசை விடுவதில்லை. கல்லூரி காலத்தில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மந்த நேரங்களில் டீ குடிப்பது வழக்கம்.காபி வாங்கிக் கொண்டிருக்கும் போது வேறு ஒருவர் விலைப்பட்டியலைப் பார்த்துவிட்டு போன தடவையை விட விலை அதிகமாயிருக்கே என்று எரிச்சலுடன் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் போனார். 
     ஒரு ஆளில்லா டீக்கடையில் (சாலை ஓரக்கடையை நினைக்காதீர்கள்), டீ பாக்கெட்டுகள் அழகாக, கண்ணாடி வழியாகப் பார்க்க வசதியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒயிட்,ப்ளாக்,ரெட்,ஃப்ராஸ்ட்,கோரகுண்டா என்று பல வகையான டீ வெரைட்டிகள். கடைசி வகை டீயின் பெயரைப் பார்த்தால் அது தமிழ்நாட்டில் எந்தளவு விற்கும் என்பது சந்தேகமே. குடித்தால் அதன் பெயரைப் போல் ஆகிவிடுவோமென்று பயம் வரலாம்.
    சற்று முன் இயங்கிக் கொண்டிருந்த எஸ்கலேட்டர் இப்போது சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை ஆள் வந்தால் மட்டும் இயங்குகிறதோ என்று தோன்றியது. அதைச் செய்த நிறுவனம் ஷிண்ட்லர் என்று பெயர் பார்த்தவுடன் ஷிண்ட்லர் லிஸ்ட் (ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்) திரைப்படம் ஞாபகம் வந்தது. நாஜிகளின் கொலை வெறியிலிருந்து  தன்னிடம் வேலை பார்த்த பல யூதக்குடும்பங்களைக் காப்பாற்றிய ஒரு ஜெர்மன் தொழிலதிபரைப் பற்றிய உண்மைக் கதை அது.

    நெடு நெடு என்று உயரமாய் இளவயது ஆணும் பெண்ணும் வந்தார்கள்.ஏகப்பட்ட இருக்கைகள் காலியாய் இருந்தாலும் அவர்கள் உட்காரத் தேர்ந்தெடுத்தது இயங்காமல் இருந்த இரண்டு மசாஜ் சேர்கள். உடையில் இருக்கும் நாகரிகம் உட்காரும்போது இல்லை.அந்த ஆண் தாடியுடன்,தனது ஆப்பிள் தொடைக் கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் இந்திப்படங்களில் கொஞ்ச வயது நடிகைகளை முக்காட்டைப் போட்டு அம்மா கேரக்டர் ஆக்குவார்களே, அது போல முக்காடு போட்டபடி ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். என்ன புத்தகம் அது என்று நான் ஏன் பார்க்கவில்லை என்று இப்போது தோன்றுகிறது. விடையில்லை.
    நேரத்தைப் போக்க எனது சாம்சங் செல்பேசியில் ட்ராப் என்ற விளையாட்டை விளையாடினேன். எஃப் எம்மில் அந்த நேரத்தில் தெளிவாகக் கேட்டது ஒரே ஒரு அலைவரிசை தான். அது 91.1. 'ஓ மணப்பெண்ணே' என்ற பாடல் தூக்கக் கலக்கத்தில் வேறு விதமாகக் காதில் விழுந்து சிரிக்க வைத்தது.
  ஒரு வழியாக டெர்மினலைத் தொடங்கினார்கள்.  ஏறி உட்கார்ந்ததும் சிறிது நேரத்தில் விமானம் நிரம்பியது. விமானத்தின் ஸ்பீக்கர் மூலம் இந்தியில்,ஆங்கிலத்தில் வரவேற்றார்கள். இன்னொரு பெண், சிறிது தூக்கக் கலக்கத்தில் விமானம் ஒரு மணி பதினைந்து நிமிடத்தில் டெல்லி(?) சென்றடையுமென்று அனொன்ஸ் செய்தாள். நான் புனே போக வேண்டும். 'நல்லாத்தானடா போய்க்கிட்ருந்துச்சு?".

(தொடரும் . . . )

2 comments:

  1. your style of writing is fantastic.
    Have found a great blog. I am proud of myself :-)

    ReplyDelete
  2. Thanks Sairam for appreciating both of us. :) I like your blog's title!

    ReplyDelete